ஷ்யாம் நியூஸ்
29.07.2022
தூத்துக்குடி அருகே முதியவரை கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீச முயன்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை வ.உ.சி. நகர் சிவன் கோவில் பகுதியில் உள்ள மொட்டை கிணறு அருகே சந்தேகப்படும்படியாக மர்ம நபர் ஒருவர் நிற்பதாக புதுக்கோட்டை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ஒரு லோடு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. கிணற்றின் அருகே சாக்கு மூட்டையுடன் அந்த மர்ம நபர் நின்று கொண்டிருந்தார்.
போலீசை பார்த்தவுடன் அந்த நபர் தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் போலீசார் அந்த மூட்டையை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் சாயர்புரத்தை சேர்ந்த சிம்சன் என்பதும், அவரது உடலை கிணற்றில் மர்ம நபர் வீச முயன்றதும் தெரியவந்தது. அவரை கொலை செய்த மர்ம நபர் யார்?, எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபரை வலை வீசி தேடிவருகிறார்கள்.