ஷ்யாம் நியூஸ்
27.07.2022
உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க தமிழக அரசு ரூ.4¼ கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக அதிக அளவில் உப்பு உற்பத்தி நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு ஆகும். இதில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிலில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் மழைக்காலங்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்படுவதால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர்.
இதனால் தொழில் பாதிக்கப்படும் மழைக்காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு மழைக்கால நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்று உப்பள தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் உப்பள தொழிலாளர்களுக்கு பணி இல்லாத காலங்களில் மழைக்கால நிவாரணம் வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி தமிழக அரசு வெளியிட்டு உள்ள அரசாணையில், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் 8 ஆயிரத்து 465 உப்பள தொழிலாளர்கள் பதிவு செய்து உள்ளனர். இந்த தொழிலாளர்களுக்கு உப்பள தொழில் நடைபெறாத மழைக்காலங்களான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு நிவாரண உதவியாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.4 கோடியே 23 லட்சத்து 25 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் உப்பளத் தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான மழைக்கால நிவாரண உதவி வழங்கப்பட இருப்பதால் உப்பள தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.