ஷ்யாம் நியூஸ்
11.08.2022
ஆறுமுகநேரி மெயின் பஜார் பகுதியில் சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி -திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பு உள்ளது. இந்த சாலையின் கீழ் ஆத்தூரில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குளம் போல் தண்ணீர் பெருகியது. இது பற்றி பொதுநல அமைப்புகள் புகார் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. ஆனால் அதற்காக சாலையில் தோண்டிய பள்ளத்தை நேர்த்தியாக மூடாமல் மணலையும் கல்லையும் குவித்து அதன் மீது குச்சியை நட்டு, பிளாஸ்டிக் பை ஒன்றை கொடி போல் பறக்க விட்டுள்ளனர்.
போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையில் இந்த செயல்பாடு விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. வேகமாக வரும் வாகனங்கள் இந்த மணல் குவியலையும், அதன் மீது உள்ள கொடி நாட்டலையும் திடீரென கண்டு நிலைகுலைய நேரிடுகிறது. நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு பெரும் இடைஞ்சலாகவும் உள்ளது. ஆகவே பள்ளம் தோண்டப்பட்ட அந்த இடத்தை நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.