ஷ்யாம் நியூஸ்
11.08.2022
சிவகளையில் நடந்து வரும் அகழாய்வு பணியில் முதல் முறையாக தங்கத்தால் ஆன பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தற்போது வரை 20க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதில் சிவகளை பரம்பு மற்றும் ஸ்ரீமூலக்கரையில் இதுவரை 50க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பராக்கிரம பாண்டி திரடு பகுதியில் நடந்த ஆய்வுப் பணியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டசில்கள், தக்களி சாதனம், புகைப்பான், ஆட்டக்காய்கள், பாசி மணிகள் வளையல் துண்டுகள், காதணிகள், எலும்பால் செய்யப்பட்ட கூர்முனைக் கருவிகள், முத்திரைகள் உள்பட 80 தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் சங்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமான அமைப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செங்கல் கட்டுமானத்தில் உள்ள ஒரு செங்கல் 25 செண்டி மீட்டர் நீளமும், 16 செண்டி மீட்டர் அகலமும், 5 செண்டி மீட்டர் உயரமும் உள்ளது. இந்நிலையில் தற்போது பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடந்து வரும் அகழாய்வு பணியில் தங்கத்தால் ஆன பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தங்கத்தால் ஆன பொருள் என்ன என்பது தெரியவில்லை. மேலும் அந்த தங்கத்தில் மேல் சிறு சிறு கோடுகள் உள்ளது.
ஆய்வில் தங்கம் கிடைத்துள்ளதால் ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியை பொறுத்தவரை இறந்தவர்களை புதைத்த இடத்தில் தான் தங்கப்பொருள்ட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் முறையாக சிவகளை அகழாய்வு பணியில் வாழ்விடப்பகுதியில் தங்கப்பொருள் கிடைத்துள்ளது ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.