ஷ்யாம் நியூஸ்
05.08.2022
திருச்செந்தூர் அருகே காதலியின் கழுத்தை கத்தியால் அறுத்த காதலன் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள நா.முத்தையாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகள் வனசந்தியா (20). இவர் உடன்குடி அருகில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த பாண்டியன் மகன் கார்த்திக் (21). இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர்கள் 2 பேரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த காதல் விவகாரம் வனசந்தியாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் மகளை கண்டித்தனர். இதையடுத்து, வனசந்தியா, கார்த்திக்கிடம் கடந்த ஒரு மாதமாக பேசுவதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலையில் வனசந்தியா வீட்டிற்கு சென்ற கார்த்திக், அங்கு தனியாக இருந்த வனசந்தியாவிடம், தன்னிடம் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு வனசந்தியா மறுப்பு தெரிவித்தார்.
இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வனசந்தியா கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று வனசந்தியாவை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு வீட்டிற்கு சென்ற கார்த்திக் மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தொங்கினார்.
இதை பார்த்த குடும்பத்தினர் கார்த்திக்கை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலியின் கழுத்தை அறுத்து காதலன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.