ஷ்யாம் நியூஸ்
04.08.2022
பழமைவாய்ந்த வல்லநாடு திருமூலநாதர் கோவிலில் ரூ.3 கோடியில் திருப்பணியை ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.
வல்லநாட்டில் திருமூலநாதர் கோவில் என்னும் பழமையான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. எனவே இந்த கோவிலை புனரமைக்க வேண்டும் என்று தொடர்ந்து பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் வல்லநாடு திருமூலநாதர் கோவில் சீரமைப்பு பணிக்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் இந்த கோவிலுக்காக தன்னார்வலர்கள் இணைந்து ரூ.2 கோடி செலவு செய்ய முன் வந்துள்ளனர். இதன் மூலம் ரூ.3 கோடி செலவில் கோவில் சீரமைப்பு பணி நடக்க உள்ளது. இதற்காக முதல் கட்டமாக ரூ.1½கோடி மதிப்பில் புதிய கொடிமரம், புதிய தேர் செய்யவும், 700 மீட்டரில் சுற்றுசுவர் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள ரூ.1½ கோடியில் கோவில் பணிகளை சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த நிலையில் வல்லநாடு திருமூலநாதர் கோவில் சுற்றுச்சுவர் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். எஸ் பி பாலாஜி சரவணன் முன்னிலையில் வகித்தார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், கருங்குளம் யூனியன் தலைவர் கோமதி ராஜேந்திரன், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் செல்வி,பாக்கியலீலா, இந்து சமய அறநிலையத்துறை நம்பி உள்பட பலர் உடன் இருந்தனர்.