தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் மெகா தூய்மை பணி..!பாலிதீன்-பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்க்க மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி அறிவுறுத்தல்..
ஷ்யாம் நியூஸ்
17.09.2022
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் மெகா தூய்மை பணி..!பாலிதீன்-பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்க்க மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி அறிவுறுத்தல்..
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் மெகா தூய்மை பணி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார் .ஒரே நாளில் 28டன் குப்பைகள் அதிரடியாக அகற்றம்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கடற்கரை பகுதிகளில் ஒரே நாளில் 28டன் குப்பைகளை அகற்றி மாநகராட்சி நிர்வாகம் சாதனை படைத்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்குமாறு மேயர் ஜெகன்பெரியசாமி அறிவுறுத்தியுள்ளார்.
உலக கடல் தூய்மை தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரையோர கிராமங்கள், கடற்கரையோர பூங்காங்கள் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் செப்.17ம் தேதி முதல் அக்.2ம் தேதி வரை வரையிலான வார விடுமுறை நாட்களில் மெகா தூய்மை பணிகளை அந்தந்த பகுதிகளிலுள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொள்ளவேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசின் உத்தரவின்பேரில் உலக கடல் தூய்மை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ ஆலோசனையின்பேரில், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கடற்கரையோர பகுதிகளில் மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில், தூய்மை பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள் அடங்கிய குழுவினர் மெகா தூய்மை பணிகளை அதிரடியாக மேற்கொண்டனர்.
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை மற்றும் திரேஸ்புரம், விவேகானந்தர் நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மெகா தூய்மை பணியில் கடற்கரையோர பகுதிகளில் கிடந்த பாலிதீன் பேப்பர்கள், பிளாஸ்டிக் கழிவுகள், சேதமாகி பயன்படுத்தப்படாத மீன்பிடி வலைகள், கயிறுகள், பேப்பர் கப்புகள் உள்ளிட்ட குப்பைகள் அனைத்தும் முற்றிலுமாக அகற்றப்பட்டது.
அதோடு, திரேஸ்புரம் கடற்கரை பகுதிகளில் பக்கிள் ஓடையின் கழிவுநீர் கடலோடு கலக்கும் முகத்துவாரப்பகுதியில் அதிகளவில் குவிந்து கிடந்த பாலிதீன் கவர்கள், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள், கப்புகள் என ஏராளமான சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் குப்பைகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்டது.
மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், நாட்டுநலப்பணித்திட்ட மாணவ, மாணவியர்கள் அடங்கிய குழுவினர் மாநகராட்சி வாகனங்கள் மூலமாக ஒரே நாளில் சுமார் 28டன் குப்பை கழிவுகளை அகற்றி பெரும் சாதனை படைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், வி.கே.என்.டிரஸ்ட், தோள்கொடு தோழா நண்பர்கள் குழுவினர், நல்லமனிதன் அஜித் நற்பணி மன்றத்தினர் ஆகிய தன்னார்வலர்கள் குழுவினர் மற்றும் தூத்துக்குடி வ.உ.சி அரசு இன்ஜினீயரிங் கல்லூரி, மதர்தெரசா இன்ஜினீயரிங் கல்லூரி, பிஷப்கால்டுவெல் கல்லூரி, காமராஜ் கல்லூரி, செயின்ட்மேரீஸ் மகளிர் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 550பேர் அடங்கிய குழுவினர் மாநகர நகர்நல அலுவலர் அருண்குமார், உதவி ஆணையர் தனசிங், சுகாதார அலுவலர்கள் ஹரிகணேஷ், ஸ்டாலின் பாக்யநாதன், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் ஜெயசீலி, ஜெபஸ்டின்சுதா, பவானிமார்ஷல் ஆகியோர் மேற்பார்வையில், மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில் இந்த மெகா தூய்மை பணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
அதிரடியாக செயல்பட்டு ஒரே நாளில் 28டன் குப்பை கழிவுகளை அகற்றிய இந்த மெகா தூய்மை பணியாளர் குழுவினரை *மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி பாராட்டி வாழ்த்தினார்.
அதனைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி கூறியதாவது, தூத்துக்குடி மாநகராட்சியில் மக்களுக்கான அடிப்படைவசதிகளை முழுமையாக செய்து கொடுத்திட மாநகராட்சி நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இதேநேரத்தில், தமிழகத்திலேயே 100க்கு 100சதவீதம் மிகத்தூய்மையான, சுத்தமான மாநகராட்சி ''தூத்துக்குடி மாநகராட்சி தான்'' என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்திடும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணிகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அதிகமாக கூடும் பூங்கா, பஸ் நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட முக்கியமான இடங்களில் மாநராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை கிளினீங் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதோடு பொதுஇடங்களில் பொதுமக்கள் குப்பைகளை கண்டகண்ட இடங்களில் போடுவதை தவிர்த்திட நவீன வடிவிலான குப்பை தொட்டிகள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பைத்தொட்டிகளில் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து போட்டிடவேண்டும்.
பொதுவாக மாநகராட்சி பகுதிகளில் வாழ்ந்துவரும் பொதுமக்கள், வணிகர்கள் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம்பிரித்து குப்பைத்தொட்டிகளில் போடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும் பெரும்பாலானவர்கள் இதனை சரியான முறையில் கடைபிடிப்பதில்லை. இதுகுறித்து விழிப்புணர்வு பள்ளி மாணவ, மாணவியர்கள் மூலமாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதேநேரத்தில், தூத்துக்குடி மாநகராட்சியில் அரசால் தடை செய்யப்பட்ட சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதும் இந்த தடை செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு பொதுமக்களிடத்தில் இன்னும் குறையாமலே இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே, வணிகர்கள் மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் பொருட்களை கண்டிப்பாக விற்பனை செய்யக்கூடாது. விதிமுறைகளை மீறும் வணிகர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதோடு பொதுமக்கள் அரசால் தடை செய்யப்பட்ட இந்த பொருட்களை தாமாகவே முன்வந்து பயன்படுத்த மாட்டோம் என்ற உறுதிமொழியை ஏற்று சுத்தமான, சுகாதாரமான குப்பை இல்லாத மாநகராட்சியாக தூத்துக்குடி மாநகராட்சியை மாற்றிட ஒத்துழைத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் இதுகுறித்து தங்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திடவேண்டும் என்றார்.