ஷ்யாம் நீயூஸ்
12.06.2022
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தூய்மை பணி அமைச்சர், கலெக்டர், மேயர், ஆணையர் அதிரடி
தூத்துக்குடி பிரையண்ட்நகரில் மாநகராட்சி பூங்காவை சுத்தம் செய்யும் பணியை கலெக்டர், மேயர் தொடங்கி வைத்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரையண்ட் நகர் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா பயன்பாடின்றி கிடந்தது. இதனால் பூங்கா முழுவதும் முள்செடிகள் வளர்ந்து புதர் மண்டி காட்சி பொருளாக கிடந்தது. இந்த பூங்கா பகுதியில் சமூக விரோத செயல்கள் நடந்து வருவதாக பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் குற்றம் சாட்டி வந்தனர்.
மேலும் இந்த பூங்காவை சுத்தப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி மக்கள் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியிடம் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் பூங்காவை சுத்தம் செய்யும் பணிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் மண்வெட்டியை வைத்து வெட்டி தொடங்கி வைத்தனர்.
இதைதொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகள் பூங்காவை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். முன்னதாக பொதுமக்கள் மத்தியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திறந்தவெளியில் குப்பைகளை கொட்ட மாட்டோம், மற்றவர்களையும் குப்பைகளை கொட்ட அனுமதிக்க மாட்டோம் என கலெக்டர் தலைமையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பின்னர் அப்பகுதிகளில் சாலையில் உள்ள தேவையற்ற மணல்களை அப்புறப்படுத்தும் பணியை சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி பொறியாளர் சரவணன், நகர் நல அலுவலர் அருண்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் சேகர், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், மேயரின் நேர் முக உதவியாளர்கள் ரமேஷ், பிரபாகர், வட்டபிரதிநிதி சுப்பையா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.