21-ம் நூற்றாண்டில் தேசத்தில் யாரும் ஏழைகளாக இருக்கக்கூடாது!காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி!
26.03.2019
21-ம் நூற்றாண்டில் தேசத்தில் யாரும் ஏழைகளாக இருக்கக்கூடாது!காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி!
21-ம் நூற்றாண்டில் தேசத்தில் யாரும் ஏழைகளாக இருக்கக்கூடாது, வறுமை மீது சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தி, 20 சதவீதம் ஏழை மக்களுக்கு மாத வருமானம் ரூ.12 ஆயிரம் கிடைக்க வகை செய்வோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதியாக அளித்தார்.
ராஜஸ்தான் மாநிலம், கங்கா நகர் மாவட்டம், சூரத்கார்க் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் இன்று நடந்தது.
இதில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசியதாவது:
''காங்கிரஸ் கட்சி இந்த நாட்டின் ஏழ்மை மீது துல்லியத் தாக்குதல் நடத்தப் போகிறது. தேசத்தில் இருந்து ஏழைகளை விரட்ட பாஜக முயற்சித்தது. நாங்கள் ஏழ்மையை விரட்ட முயற்சிக்கிறோம்.
ஏழைகளுக்கான குறைந்தபட்ச வருமானம் தான் எங்களின் மிகப்பெரிய திட்டம். இத்திட்டத்தை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு செய்தோம்.இதன்படி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 20 சதவீத ஏழை மக்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் வருமானம் கிடைக்க உறுதி செய்யப்படும்.
மோடியின் ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம், ஏழ்மை அதிகரித்தது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 14 கோடி ஏழைகள் வறுமையில் இருந்து மீண்டார்கள். இப்போது அந்த மக்களை மீண்டும் ஏழ்மையில் மோடி தள்ளிவிட்டார்.
21-ம் நூற்றண்டில் தேசத்தில் யாரும் ஏழைகளாக இருக்கக்கூடாது. காங்கிரஸ் அரசு செயல்படுத்தி கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தையும், உணவுப் பாதுகாப்புத் திட்டத்தையும் பாஜக அரசு பலவீனப்படுத்திவிட்டது. இதனால், வேலை வாய்ப்பும், வறுமையும் அதிகரித்துள்ளது.
மக்களின் பணத்தைத் திருடி நாட்டில் உள்ள மிகப்பெரிய தொழிலதிபர்களுக்கு வழங்கி உதவி செய்கிறது. அவர்களின் ரூ.3.5 லட்சம் கோடி கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது, ஆனால், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது.
கடந்த தேர்தலின்போது ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவேன், அனைவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று மோடி வாக்குறுதியளித்தார். ஆனால், யாருக்கும் வேலையும் வழங்கவில்லை, பணமும் டெபாசிட் செய்யவில்லை.
மோடி, தனது மனதில் என்ன தோன்றுகிறதோ அதைப் பேசி வாக்குறுதியாக வழங்குகிறார். தன்னைப் பிரதமராக்க வேண்டாம், மாறாக நாட்டின் காவலாளியாக மாற்றுங்கள் என்று பேசினார். ஆனால், ஒருபோதும் மக்களின் காவலாளியாக இருப்பேன் என்று மோடி சொல்லவில்லை. மோடி அனில் அம்பானியின் காவலாளியாக இருக்கிறார்.
வங்கியில் இருக்கும் மக்களின் பணத்தை எடுத்து மத்திய அரசு, மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, அருண் ஜேட்லி ஆகியோருக்கு வழங்கியிருக்கிறது. இவர்கள் அனைவரும் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்துள்ளார்கள்.
அமித் ஷாவின் மகன் ரூ.50 ஆயிரத்தில் தொழில் தொடங்கி, சில மாதங்களில் கோடிக்கணக்கில் லாபம் எவ்வாறு ஈட்ட முடிந்தது? வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிய தொழிலதிபர் மெகுல் சோக்சி வங்கி மூலம் ஜேட்லி மகளுக்குப் பணம் அனுப்பினார். விஜய் மல்லையா நாட்டை விட்டுத் தப்பும் முன் ஜேட்லியை சந்தித்துவிட்டுச் சென்றார்''.