தூத்துக்குடி மாவட்டத்தில் சுய ஊரடங்கு 100% வெற்றி: ஆட்சியர் பேட்டி
தூத்துக்குடி மாவட்டத்தில் சுய ஊரடங்கு முழுமையாக 100% வெற்றி பெற்றுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரானோ சிறப்பு வார்டு அருகில் மருத்துவர்கள், காவல்துறையினர், அரசு அலுவலர்கள், ஊடகத் துறையினரின் பணிகளை பாராட்டி வாழ்த்தி நடைபெற்ற கைதட்டல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 7 மணி முதல் கடைகள் மூடப்பட்டு, சுய ஊரடங்கு முழுமையாக 100% வெற்றி பெற்றுள்ளது.
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்துள்ளனர். சுய ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தந்த தூய்மை பணியாளர்கள், அதிகாரிகள், அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 5 மணிக்கு கைதட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இந்த ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீடிக்கும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். காலை 5 மணிக்கு பின்னர் சிறிய கடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் இடங்கள் செயல்படலாம். பெரிய மால்கள், வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதி இல்லை. வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை யாருக்கும் பாதிப்பு இல்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக இரண்டு பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை. பொதுமக்கள் சுயகட்டுப்பாட்டுடன் வருகிற 31-ஆம் தேதி வரை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.