SHYAM NEWS
20.02.2024
ரெட்’ கேட்டகிரியில் உள்ள மற்ற நிறுவனங்கள் மீது ஆக்ஷன் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டெர்லைட் வாதம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு எதிரான வேதாந்தா நிறுவனத்தின் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரெட் கேட்டகிரியில் உள்ள மற்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை இல்லை என வேதாந்தா தரப்பு வாதம் வைத்துள்ளது.
தூத்துக்குடியில் 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கடந்த 2018-ல் போராட்டம் நடைபெற்றது. இது, பெரும் போராட்டமாக வெடித்ததைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து 2018, மே 28 முதல் இந்த ஆலை மூடப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து, தடை உத்தரவை நீக்கி மீண்டும் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் பலர் வேலை இழந்துள்ளனர் என்றும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் சுமார் 10,000 பேர் வேலை வாய்ப்பை பெறுவார்கள் என்றும் வேதாந்தா தரப்பில் வாதிடப்பட்டது.
வேதாந்தா நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் ஷியாம் திவான் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். தூத்துக்குடி சிப்காட் பரப்பளவு 1,800 ஏக்கர் என்றும், அதில் 1000 ஏக்கர் பரப்பளவில் ஸ்டெர்லைட் நிறுவனம் இயங்கி வருவதாகவும், சிப்காட்டில் 67 நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், அவற்றில் 27 நிறுவனங்கள் ரெட் கேட்டகிரியில் வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ரெட் கேட்டகிரியில் உள்ள மற்ற நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், ஸ்டெர்லைட் ஆலை மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வேதாந்தா தரப்பு வாதம் வைத்துள்ளது.
மேலும், 2018ஆம் ஆண்டு, ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு லைசென்ஸ் புதுப்பிக்க விண்ணப்பித்தபோது அது கிடப்பில் போடப்பட்டதாகவும், ஸ்டெர்லைட் ஆலை செயல்படக்கூடாது என தமிழக அரசு தெரிவித்ததாகவும், வேதாந்தா தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டின்போது, இந்தியாவின் மொத்த தாமிர உற்பத்தியில் 36 சதவீதம் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் உற்பத்தி செய்ததாகவும், நாளொன்றுக்கு 1700 டன் தாமிரத்தை உற்பத்தி செய்யும் திறனுடன் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வந்தது என்றும், தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் வேதாந்தா தரப்பு வாதங்களை வைத்துள்ளது.