ஷ்யாம் நீயூஸ்
02.12.2021
தூத்துக்குடியில் மழை பாதித்த இடங்களில் முதல்வர் ஆய்வு!
தூத்துக்குடியில் மழை பாதித்த இடங்களில் முதல்வர் ஆய்வு தூத்துக்குடியில் மழை பாதித்த இடங்களில் முதல்வர் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழை பாதித்த இடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட அவர் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மழை பாதிப்புகளை பார்வையிட சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு நண்பகல் 1.40 மணியளவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வந்தடைந்தார்.
தொடர்ந்து, அங்கிருந்து கார் மூலம் புறப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட மழை பாதித்த இடங்களை நேரில் பார்வையிட்டார்.
தேங்கிய தண்ணீரில் நீண்ட தொலைவு நடந்து சென்று பார்வையிட்ட அவர் தண்ணீரை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், அந்தப் பகுதியில் திரண்டிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.
ஆய்வின்போது, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ. கீதாஜீவன், மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி. சண்முகையா, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.