ஷ்யாம் நீயூஸ்
18.12.2019
தூத்துக்குடி அருகே புதைக்கப்பட்ட பெண் சிசு உடல் தோண்டி எடுப்பு: தாசில்தார் முன்னிலையில் பரிசோதனை!!
தூத்துக்குடி அருகே பாலியல் பலாத்காரத்தால் மாணவிக்கு பிறந்த குழந்தை புதைக்கப்பட்ட விவகாரத்தில், இன்று அந்த குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
தூத்துக்குடி அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் கீழத்தெருவை சேர்ந்த டி.வி. மெக்கானிக் ராஜூ (48) என்பவர் அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை மாணவியின் குடும்பத்தினர் வீட்டின் பின்புறத்தில் புதைத்தனர். இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜூவை கைது செய்தனர். மேலும் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டதா? என சிறுமியின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் இன்று மதியம் 1 மணியளவில் தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் அமுதா, கிராம நிர்வாக அதிகாரி ஆரோக்கிய பாத்திமா ராணி, ஆகியோர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் பிரதாபன், உதயகுமார் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை நடத்தினர். அப்போது அந்த பெண் குழந்தை 7½ மாத சிசு என்பது தெரியவந்தது. சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற பரிசோதனைக்கு பின்னர் உடல் மாணவியின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து புதுக்கோட்டை போலீ்ஸ் இன்பெக்டர் முத்துபாண்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் 15 நாட்களில் கிடைக்கும் அதன் பின்னர் மேல் நடவடிக்கை எடுககப்படும் என்று கூறினார். இதையொட்டி அந்த கிராம மக்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.